ஒற்றைக்கல்லில் குடையப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்!




கோயில்களில் எல்லாம் ஒற்றைக்கல்லினால் செய்யப்பட்ட மிகப்பெரிய சிற்பங்களை நாம் காணலாம். ஆனால், இவற்றைக்காட்டிலும் ஒரே பாறையில் குடையப்பட்ட மிகப்பெரிய கோயில் ஒன்றே மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. அதிகம் வெளியுலகிற்கு தெரியாத, பிரபலமாகாத அக்கட்டிடக்கலை உன்னதத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரிலிருந்து 29கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் எல்லோரா குகையினுள் இருக்கும் ‘கைலாசா கோயில்’ தான் உலகில் ஒற்றைக்கல்லில் குடையப்பட்ட மிகப்பெரிய கோயிலாகும்.
இந்த எல்லோரா சிற்பங்கள் ராஸ்டிரகூடர் மற்றும் யாதவ வம்சத்தினரால் கட்டப்பட்டதாகும். யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய குடைவரை கோயில் கட்டிடக்கலையின் உச்சமாக எல்லோரா குகைகள் திகழ்கின்றன என்றே சொல்லலாம்.
சரணாந்த்ரி மலையில் மொத்தம் 34 எல்லோரா குகை குடைவரை கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் 17ஹிந்து கோயில்களும், 12பௌத்த கோயில்களும், 5 ஜைன கோயில்களும் இருக்கின்றன.
அருகருகே வெவ்வேறு மத கோயில்கள் இருப்பது அக்காலத்தில் நிலவிய மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த கோயில்கள் 6-9ஆம் நூற்றாண்டிற்குள் கட்டப்பட்டவையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.
கலாச்சுரி, சாளுக்கியர், ராஸ்டிரகூடர் போன்ற அரச வம்சங்களின் கீழ் எல்லோரா குகைகள் இருந்திருக்கின்றன.
எல்லோரா குகை கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் கைலாசநாதா கோயில் தான் உலகிலேயே ஒரே கல்லில் குடையப்பட்ட மிகப்பெரிய கோயிலாகும். இதனுள் சிலிர்ப்பூட்டும் மிகப்பெரிய சுவர்ச்சிற்பங்கள் ஏராளமாக இருக்கின்றன.
கி.பி 757-783 காலகட்டத்தினுள் ராஸ்டிரகூடர் வம்சத்தை சேர்ந்த முதலாம் கிருஷ்ணா என்ற அரசரின் ஆட்சி காலத்தில் கைலாசநாதா கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.  இக்கோயிலின் மூலவராக சிவபெருமான் இருக்கிறார்.
இந்த கோயிலை கட்டிமுடிக்க கிட்டத்தட்ட 20ஆண்டுகள் ஆகியிருக்கின்றதாம். சிவபெருமானின் உறைவிடமான கைலாச மலையை மறுவுருவாக்கம் செய்யும் நோக்கோடு இந்த கைலாசநாதா குடைவரை கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
மற்ற பொதுவான கோயிகளில் இருப்பதை போன்றே இந்த குடைவரை கோயிலும் கட்டப்பட்டிருப்பது தான் ஆச்சரியமூட்டக்கூடிய விஷயமாகும். கற்தூண்கள், ஜன்னல்கள், உள் மற்றும் வெளி விகாரங்கள், மிகப்பெரிய மண்டபம் இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கோயிலின் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய சிவலிங்கம் போன்றவை திராவிட குடைவரை கட்டிடக்கலையின் உச்சமாக இருக்கின்றன.
இக்கோயிலினுள் கஜுராஹோவில் இருப்பதை போன்ற காமத்தை கொண்டாடும் மைதுன சிற்பங்களையும் நாம் காணலாம்.
உக்கிர கோலத்தில் இருக்கும் சிவபெருமானின் சுவர்ச்சிற்பம்.
எல்லோரா குகைளில் இருக்கும் இந்த சிற்பத்தில் ராமாயண கதை அப்படியே சிறிய சிறிய சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.
எல்லோராவின் வெப்பநிலை எப்போதும் சீராக இருப்பதால் வருடத்தின் எந்த காலங்களிலும் சுற்றுலா வரலாம். இருந்தாலும் கோடை காலத்தில் வெப்பம் சற்று அதிகமாக இருப்பதால், எல்லோராவின் குகைக்கோயில்களில் நடந்து செல்வது சிலருக்கு சோர்வை ஏற்படுத்தலாம். எல்லோராவின் சுட்டெரிக்கும் கோடை காலத்தோடு ஒப்பிடுகையில் அதன் மழைக் காலம் சுற்றிப் பார்க்க மிகவும் சிறந்தது.
எல்லோரவை நீங்கள் விமானம், ரயில் மற்றும் சாலை மூலமாகவும் சுலபமாக அடையலாம். எல்லோராவுக்கு மிக அருகில் ஔரங்கபாத் விமான நிலையம் இருக்கிறது. அதே போல் 45 நிமிட நேர பயணத்தில் ஔரங்கபாத் ரயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடைந்து விடலாம்.
அதுமட்டுமல்லாமல் அஹமதாபாத் ரயில் நிலையமும் எல்லோராவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், பயணிகள் அஹமதாபாத் வந்த பிறகு ஆட்டோ மூலம் எல்லோரா வந்து சேரலாம்.
இந்திய கலாச்சாரத்தினை உலகுக்கு உணர்த்திக்கொண்டிருக்கும் எல்லோரா, இந்தியாவின் 10 முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அதோடு இந்தியாவையும், உலகையுமே மாற்றி அமைத்த சமயங்களான புத்தம், இந்து மற்றும் ஜைன மதங்களின் பெருமைகளை அறிந்து கொள்ள எல்லோராவை விட சிறந்த இடம் வேறேதும் இல்லை.

Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் சிறப்பு

கல்லணை சிறப்பு

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்..